புதுடெல்லி; இயான் புயலால் ஏற்பட்ட உயிரிழப்பு, அழிவுகளுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமெரிக்க மக்களுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கேயோ கோஸ்டா கடற்கரை பகுதி அருகே இயான் புயல் கடந்த புதன்கிழமை மதியம் கரை கடந்தது. இதனால், மணிக்கு அதிகபட்சம் 150 மைல்கள் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. பின்னர், 2வது முறையாக தெற்கு கரோலினா கடற்கரையில் கடந்த வெள்ளிக்கிழமை கரையை கடந்தது. புளோரிடாவில் நேற்று முன்தினம் இரவு 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மின்சாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டனர்.