சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் நன்னடத்தை விதிமீறி குற்றச்செயல் 12 ரவுடிகளுக்கு ஓராண்டு சிறை

சென்னை: சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் நன்னடத்தை விதிமீறி குற்றச்செயலில் ஈடுபட்ட 12 ரவுடிகளுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சென்னையில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடைபெறாமல் தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும், சென்னை  காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால்,  உத்தரவின்பேரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள், கொலை, கொலை முயற்சி குற்றங்களில் ஈடுபடுபவர்கள், திருட்டு, செயின் பறிப்பு, சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், போதைப் பொருட்கள் கடத்துபவர்கள், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு மிரட்டி பணம் பறிப்பவர்கள், நில அபகரிப்பு, ஆபாச வீடியோ தயாரிப்பு, மணல் கடத்தல், உணவுப் பொருட்கள் கடத்தல், போக்சோ மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் ஆகியோரை தீவிரமாக கண்காணித்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து வருகின்றனர்.

அதன்படி, கடந்த 01.01.2022 முதல் 30.09.2022 வரை சென்னை பெருநகரில், கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 194 குற்றவாளிகள், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 84 குற்றவாளிகள், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த 45 குற்றவாளிகள், பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய 6 குற்றவாளிகள், பெண்களை மானபங்கம் செய்த    2 குற்றவாளிகள், சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 5 குற்றவாளிகள் மற்றும் உணவு பொருள் கடத்தல் பிரிவில் கைது செய்யப்பட்ட 1 குற்றவாளி, என மொத்தம் 337  குற்றவாளிகள் சென்னை  காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், உத்தரவின்பேரில், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த 24ம் முதல் நேற்று முன் தினம்  வரையிலான ஒரு வார காலத்தில் 4 குற்றவாளிகள், சென்னை  காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், உத்தரவின்பேரில், குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும், குற்ற வழக்குகள் உள்ள நபர்கள், சம்பந்தப்பட்ட செயல்துறை நடுவர்களாகிய துணை ஆணையாளர்கள் முன்பு சாட்சிகளுடன் ஆஜராகி, தான் திருந்தி வாழப்போவதாகவும், இனி 1 வருடத்திற்கு எந்த குற்றச் செயலிலும் ஈடுபடமாட்டேன் எனவும் நன்னடத்தை பிணை பத்திரங்கள் எழுதி கொடுத்து, மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக வண்ணாரப்பேட்டை  காவல் மாவட்டத்தில் 6 குற்றவாளிகள், கீழ்ப்பாக்கம் காவல் மாவட்டத்தில் 2 குற்றவாளிகள்,    மற்றும் தி.நகர், புனித தோமையர் மலை, மயிலாப்பூர் மற்றும் பூக்கடை ஆகிய காவல் மாவட்டங்களில் தலா 1 குற்றவாளி, என மொத்தம் 12 குற்றவாளிகள் கடந்த  ஒரு வாரத்தில் செயல்துறை நடுவர்களாகிய துணை ஆணையாளர்கள் உத்தரவின்பேரில், பிணை ஆவணத்தில் எழுதிக் கொடுத்த 1 வருட காலத்தில் நன்னடத்தையுடன் செயல்பட்ட நாட்கள் கழித்து மீதமுள்ள நாட்கள் பிணையில் வரமுடியாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories: