பல்லடம் அருகே பியூட்டி பார்லர் பெண்ணை கடத்தி சித்ரவதை; வீடியோ வெளியிட்டு கதறல்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வடுகபாளையத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி பிரவீனா (28). சேகர் ஆஸ்திரேலியாவில் பணியாற்றி வருகிறார். பிரவீனா மங்கலம் சாலை பகுதியில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். இந்நிலையில், பிரவினாவின் தாய் சிலோமீனா, பல்லடம் போலீசில் தனது மகளை இரண்டு நாட்களாக காணவில்லை. அவளை கண்டுபிடித்து தரும்படி புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து பிரவீனாவை தேடி வந்தனர்.

இந்நிலையில், ஒரு வீடியோசமூக வலைதளங்களில் வைரலானது. அதில் பிரவீனா பேசியிருப்பதாவது: வாடிக்கையாளராக வந்து செல்லும் செட்டிபாளையம் பகுதியில் வசிக்கும் தமிழ்செல்வியின் கணவர் சிவகுமார், நாம் இருவரும் பாட்னராக இருந்து டெக்ஸ்டைல்ஸ் தொழில் செய்யலாம் என்று என்னிடம் வீட்டு பத்திரத்தை வாங்கி வங்கியில் அடமானம் வைத்து ரூ.3.75 கோடி வரை பெற்றுக்கொண்டார்.வீடு ஏலத்துக்கு வந்த நிலையில், பணத்தை திருப்பி கேட்க முயன்ற போது, தொழில் விஷயமாக வெளியூர் அழைத்து செல்வதாக கூறி அழைத்து சென்று திருச்சி பகுதியில் என்னை அடைத்து வைத்து சில பத்திரங்களில் கையெழுத்து பெற்றுக்கொண்டார்.

என்னை எப்படியாவது சிவக்குமாரிடம் இருந்து காப்பாற்றி விடுங்கள். நான் உங்களை சொந்த அண்ணனாக நினைத்து கேட்கிறேன். அவன் என்னை ரொம்ப சித்ரவதை செய்கிறான். தினம், தினம் என்னை கெஞ்ச வைக்கிறான். அவனிடம் இருந்து என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள். மேலும், வேறு எங்கும் செல்ல இயலாத சூழ்நிலையை உருவாக்கி விட்டான். என்னை காப்பாற்றுங்கள். இவ்வாறு அப்பெண் கண்ணீர் மல்க பேசியிருந்தார்.

பிரவீனா வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. வீடியோவை கைப்பற்றிய பல்லடம் போலீசார் பிரவீனாவை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், திருச்சியில் அவர் எங்கு அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார் என்று கண்டறிய திருச்சி போலீசாரின் உதவியை நாடியுள்ளனர்.

Related Stories: