சென்னை: உயிர்நீர் இயக்க திட்ட செயல்பாடுகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக, இந்தியாவிலேயே தமிழகத்துக்கு முதல் விருது கிடைத்துள்ளது. இந்த விருதினை டெல்லியில் நடந்த விழாவில் ஜனாதிபதி முர்முவிடம் இருந்து அமைச்சர் கே.என்.நேரு நேற்று பெற்று கொண்டார். தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் சீரிய ஆலோசனைகளின்படி தமிழ்நாட்டில் உயிர் நீர் இயக்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் உள்ள 124.93 லட்சம் வீடுகளில் இதுவரை 69.14 லட்சம் வீடுகளுக்கு (55%) குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் தற்போது உயிர் நீர் இயக்க திட்டத்தின் கீழ் ரூ.18,000 கோடி அளவிற்கு 42 புதிய குடிநீர் திட்டங்களும், 56 குடிநீர் திட்டங்களை மறுசீரமைப்பு பணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டு பல்வேறு நிலைகளில் செயலாக்கத்தில் உள்ளன.