கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கட்டு வாழை இலை 1,800 ரூபாய்க்கு விற்பனை: ஆயுதபூஜை முன்னிட்டு எகிறியது

அண்ணாநகர்: ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று ஒரு கட்டு வாழை இலை 1,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு தலைவாழை இலை 5 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தில் ஆண்டிப்பட்டி, மதுரை, வேலூர், தஞ்சாவூர், தேனி மற்றும் தூத்துக்குடி, ஆந்திர மாநிலம் வத்தலகுண்டு, கடப்பா ஆகிய பகுதிகளில் இருந்து வாழை இலை கட்டுக்கள் வருகிறது. வழக்கமாக 8 அல்லது 9 லாரிகள் மூலம் வாழை இலைகள் வருகின்றன.

வரும் 4ம் தேதி ஆயூதபூஜையை முன்னிட்டு இன்று காலை கூடுதலாக 11 லாரிகளில் வாழை இலை கட்டுக்கள் வந்துள்ளது. வாழை இலை வாங்க வியாபாரிகளும் பொதுமக்களும் அதிகமாக வருகின்றனர். இதன்காரணமாக இன்று ஒரு கட்டு வாழை இலைகள் 1,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒருதலை வாழை 5 ரூபாய்க்கு விற்கிறது. சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள சில்லறை வியாபாரிகள், கோயம்பேடு மார்க்கெட்டில் வாழை  இலைகளை வாங்கி கொண்டு சில்லறை கடைகளில் ஒரு கட்டு வாழை இலை 2,000க்கு விற்பனை செய்வதுடன் ஒருதலை வாழை இலை 10க்கும் விற்பனை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து வாழை இலை வியாபாரி சந்திரசேகர் கூறும்போது, ‘’தினசரி மார்க்கெட்டில் ஒரு கட்டு வாழை இலை 500க்கும் ஒருதலை வாழை இலை ரூபாய்க்கு 2க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆயுத பூஜை முன்னிட்டு ஒரு கட்டு வாழை இலை 1,800க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் இல்லத்தரசிகள் வேதனை அடைந்துள்ளனர். இன்னும் சில நாட்களில் வாழை இலை கட்டு விலை உயரும்’ என்றார்.

Related Stories: