மாமல்லபுரம் அருகே போக்குவரத்து போலீசார் ‘மாமூல் வாழ்க்கை’ அமோகம்: கண்டு கொள்ளாத உயரதிகாரிகள்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் போக்குவரத்து போலீசார்  வாகன ஓட்டிகளை மடக்கி அத்துமீறி பணம் வசூலிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தமிழகத்தை, பொறுத்தவரை போக்குவரத்து போலீசாரின் வசூல்வேட்டை தற்போது வரை ஜோராக நடந்து வருகிறது. மேலும், போக்குரவத்து நடைமுறைகளை பின்பற்றாமலும், அதிகபாரம் ஏற்றி வரும் வாகன ஓட்டிகளிடம் இருந்து போக்குவரத்து போலீசார் பணமில்லா பரிவர்த்தனை என்ற டிஜிட்டல் முறையில் தான் அபராதம் வசூலிக்க வேண்டும் என்பது விதிமுறையாக உள்ளது. விதிமுறைப்படி, அபராதத்தொகையை போலீசார் நேரடியாக வாங்கக்கூடாது. மேலும், 24 மணி நேரத்தில் இ-சேவை மையம், பேடிஎம், கூகுல் பே, போஸ்ட் ஆபிஸ், வங்கிகள் உள்ளிட்ட ஆறு வகைகளில் அரசுக்கு அபராத தொகையை செலுத்தவேண்டும்.

ஆனால், அந்த விதிமுறைப்படி போக்குவரத்து போலீசார் வசூலிக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், மாமல்லபுரம் அடுத்த கிழக்கு கடற்கரை சாலை பூஞ்சேரி சந்திப்பு மிக முக்கியமாக சந்திப்பாக உள்ளது. சென்னையில் இருந்து புதுச்சேரி செல்லும் வாகனங்கள், மாமல்லபுரத்தில் இருந்து திருப்போரூர், திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு உள்ளிட இடங்களுக்கு செல்லும் வாகனங்களும் இந்த சந்திப்பை கடந்து தான் செல்ல வேண்டும். மேலும், பூஞ்சேரி சந்திப்பில் மாமல்லபுரம் போக்குவரத்து போலீசார் அங்கு வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி தலைக்கவசம் அணியாமல் வருபவர்கள், கார்களில் சீட் பெல்ட் அணியாமல் வருபவர்கள், அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்களை மடக்கி அபராதம் வசூலிப்பதற்கு பதிலாக நூதன முறையில் லஞ்சம் வாங்கி கொண்டு விட்டு விடுகின்றனர்.

மேலும், விதிமுறையை மீறி தங்களுக்கு சாதகமான ஒரு சூழ்நிலையை உருவாக்கி போக்குவரத்து போலீசார் விதிமீறலில் ஈடுபடுவதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. போலீசாரை, எதிர்த்து கேள்வி கேட்டால் எங்களையே எதிர்த்து கேள்வி கேட்கிறாயா எனக்கூறி அதிவேகமாய் வந்தாய், அதிகபாரம் ஏற்றி வந்தாய் என பொய் சொல்லி ரூ.2 ஆயிரம் அபாரம் விதிக்கின்றனர். பைக், கார், கனரக வாகனங்கள் எதையும் இவர்கள் விட்டு வைக்க வில்லை. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் லைசென்ஸ், ஆர்சி புக், இன்சூரன்ஸ் உள்ளிட்டவைகள் இருந்தாலும், ஏதாவது ஒரு காரணத்தை முன்வைத்து போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  எனவே, போலீஸ் உயரதிகாரிகள் தலையிட்டு வாகன ஓட்டிகளிடம் இருந்து தவறான வழியில் லஞ்சம் பெறும் போக்குவரத்து போலீசார் மீது துறை சம்பந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: