சென்னை: துபாயில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று வந்தது. அதில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, ராமநாதபுரத்தை சேர்ந்த சேக் முகமது (27) என்ற பயணி மீது சந்தேகம் ஏற்பட்டதால் அவரை நிறுத்தி உடமைகளை சோதனையிட்டனர். அதில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 பாக்கெட் விலை உயர்ந்த வெளிநாட்டு சிகரெட்களை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.1 லட்சம், அதன்பின்பும் சந்தேகம் தீராமல், அவரை தனி அறைக்கு கொண்டுசென்று சோதனை நடத்தினர்.
அப்போது அவருடைய உள்ளாடைக்குள் 260 கிராம் தங்கப் பசை மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. அதையும் கைப்பற்றினர். இதேபோல், துபாயில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த சென்னையை சேர்ந்த ஜாவித் அலி (30) என்ற பயணி மீது சந்தேகம் ஏற்பட்டதால், அவரை நிறுத்தி சோதனையிட்டனர். அவருடைய பேன்ட் பாக்கெட் மடிப்புக்குள் தங்க நாணயம், தங்க செயின் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அவரிடமிருந்து 223 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து, அவரையும் சுங்கத்துறையினர் கைது செய்தனர்.