×

கஞ்சா வியாபாரி கொலை வழக்கில் 3 பேர் கைது; 3 பேருக்கு வலைவீச்சு

பெரம்பூர்: சென்னை  புளியந்தோப்பு காந்திநகர் 8வது தெருவை  சேர்ந்தவர் கார்த்திகேயன் (எ) சேட்டு (33). இவர் மீது 2 கொலை உட்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. நேற்றிரவு புளியந்தோப்பு நெடுஞ்சாலை காந்திநகர் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள பொதுக் கழிப்பிடம் பகுதியில் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த 6 பேர் திடீரென கார்த்திகேயனை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டினர். உயிருக்கு ஆபத்தான நிலையில் கார்த்திகேயனை உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், இன்று அதிகாலை  கார்த்திகேயன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புளியந்தோப்பு உதவி கமிஷனர் அழகேசன், பேசின் பிரிட்ஜ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கடந்த 2013ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ரஞ்சித் என்பவரை கார்த்திகேயன் கொலை செய்துள்ளார்.  இதற்கு பழிக்குப்பழியாக ரஞ்சித்தின் அண்ணன் பிரேம், அவரது கூட்டாளிகள் கார்த்திக் என்கின்ற நாய்கடி கார்த்திக் உள்பட 4 பேர் சேர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். கார்த்திகேயன் கடந்த  மார்ச் மாதம் பேசின்பிரிட்ஜ் போலீசாரால் கைது செய்யப்பட்டு கடந்த 15ம் தேதி ஜாமீனில் வெளிவந்துள்ளார். சிறையில் இருந்து வெளிவந்த தகவல் அறிந்த நபர்கள் திட்டம்போட்டு கார்த்திகேயனை கொலை செய்துள்ளனர். இவ்வாறு தெரியவந்துள்ளது.

கார்த்திகேயனுக்கு விஜயசாந்தி என்ற மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளது. சம்பவம் தொடர்பாக பேசின் பிரிட்ஜ் போலீசார் வழக்குபதிவு குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், நேற்றிரவு மெரினா கடற்கரை பகுதியில் பதுங்கியிருந்த  சென்னை வியாசர்பாடி பி.கல்யாணபுரம் பகுதியை சேர்ந்த குரு என்கின்ற நரேஷ் குமார் (29), கொடுங்கையூர் சேலவாயில் பகுதியை சேர்ந்த சஞ்சய் என்கின்ற சுகுமார் (19), சவுகார்பேட்டை பகுதியை சேர்ந்த உப்புளி என்கின்ற யுவராஜ் (26) ஆகிய 3 பேரை கைது செய்தனர். முக்கிய குற்றவாளி பிரேம்குமார் (40), கார்த்திக் என்கின்ற நாய்க்கடி கார்த்திக் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Tags : 3 arrested in case of murder of ganja dealer; Netting for 3 people
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...