ஓசூர் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்ற ஜார்க்கண்டில் இருந்து 800 பெண்கள் வருகை; சிறப்பு ரயிலில் அழைத்துவரப்பட்டனர்

ஓசூர்: ஓசூர் அருகே இயங்கி வரும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றுவதற்காக, ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து 800க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் சிறப்பு ரயில் மூலம் நேற்று அழைத்து வரப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள கெலமங்கலம் பகுதியில் டாடா எலக்ட்ரானிக்ஸ் என்ற செல்போன் உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த கம்பெனியில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

இதற்காக பிளஸ்2 படித்த உள்ளூர் மற்றும் வெளியூர் இளம் பெண்கள் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான இளம் பெண்கள் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது வட மாநிலங்களில் இருந்து இளம்பெண்கள் வேலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 800க்கும் மேற்பட்ட இளம் பெண்கள், நேற்று சிறப்பு ரயில் மூலம் ஓசூருக்கு அழைத்து வரப்பட்டனர். ஜார்க்கண்ட் மாநிலம் ஹடியா ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறப்பு ரயில், ஓசூர் ரயில் நிலையத்தை நேற்று வந்தடைந்தது.

மொத்தம் உள்ள 20 பெட்டிகளில் 10 பெட்டிகளில் இளம்பெண்கள் வந்தனர். ஓசூர் வந்த இப்பெண்களை டாடா நிறுவனத்தினர் வாகனங்கள் மூலம் அழைத்துச் சென்றனர். அதிகாலை நேரத்தில் சிறப்பு ரயிலில் 800க்கும் மேற்பட்ட இளம் பெண்கள், ஒரே நேரத்தில் ஓசூர் வந்து இறங்கியதால், ரயில் நிலையம் நேற்று காலை பரபரப்பாக காணப்பட்டது. விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள அவர்கள், இன்று (1ம்தேதி) முதல் பணிக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர். தமிழகத்தில் ஏராளமான அரசுத்துறை வேலைவாய்ப்பில் வட மாநிலத்தவர் புகுந்து வரும் நிலையில், தனியார் வேலை வாய்ப்புகளிலும் வட மாநிலத்தவர்கள் அமர்த்தப்படுவது உள்ளூர் மக்களை வேதனையடைய செய்துள்ளது.

Related Stories: