வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: ஆந்திர கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நாளை, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்காக எச்சரிக்கை

இன்று முதல் 4ம் தேதி வரை குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரம் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே பாதுகாப்பு கருதி மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று வானிலை ஆய்வு மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Related Stories: