வல்லம் பகுதிகளில் போர் வைக்கும் காலம் போனது; வயலுக்குள் சென்று இயந்திரம் உருட்டும் வைக்கோல் கட்டுகள்: வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி

வல்லம்: குறுவை அறுவடை முடிந்துள்ள வயல்களில் வைக்கோல்களை பாய்போல் சுருட்டி கட்டி வைத்துள்ளனர். இவை தஞ்சாவூர் மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டம், மாநிலங்களுக்கும் கால்நடைகளுக்கு தீவனமாக அனுப்பி வைக்கப்படுகிறது.

தஞ்சாவூர் அருகே ஆலக்குடியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் குறுவை பயிர்கள் வயலில் தண்ணீரில் மூழ்கியது. பல இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த கதிர்கள் வயலில் சாய்ந்தது. தற்போது தண்ணீர் வடிந்துள்ள நிலையில் இந்த வயல்களில் அறுவடைப்பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்ட பாசனத்திற்கு இந்தாண்டு மே மாதத்திலேயே தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் குறுவை சாகுபடி பணிகள் மும்முரமாக நடந்து இலக்கை மிஞ்சியது. இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தஞ்சாவூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் ஆலக்குடி, சித்திரக்குடி, கல்விராயன்பேட்டை, கள்ளப்பெரம்பூர், பூதலூர் உட்பட பல பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவைப்பயிர்கள் மழைநீரில் வயலில் சாய்ந்தது. இந்நிலையில் தண்ணீர் வடிந்த நிலையில் தற்போது குறுவை அறுவடை பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதற்காக இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.

அறுவடை முடிந்த வயல்களில் வைக்கோலை ஒன்று சேர்த்து பாய்போல் சுருட்டும் இயந்திரங்களையும் வரவழைத்து வைக்கோல் சேகரிக்கப்படுகிறது. இப்படி சுருள் வடிவில் சேகரிக்கப்படும் வைக்கோல் பிற மாவட்டங்களுக்கு விற்கப்பட்டு வாகனங்கள் வாயிலாக அனுப்பப்படுகிறது. கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகள் மட்டும் வைக்கோல் சுருளைகளை வீடுகளுக்கு எடுத்துச் செல்கின்றனர். மேலும் ஆந்திரா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது.

முன்பு அறுவடை முடிந்து வைக்கோல் குன்று போல் கால்நடை வளர்ப்போர் தங்கள் வீடுகளின் பின்புறத்தில் குவித்து வைத்து இருப்பர். தற்போது இயந்திரங்கள் பயன்பாடு அதிகரித்து விட்டதால் சுருள் வடிவில் சுருட்டப்படுகிறது. இதனால் நேரம் மிச்சமாகிறது. இந்த வைக்கோல் சுருளாக கட்ட ஒரு கட்டுக்கு இயந்திர வாடகையாக ரூ.35ம், விவசாயிக்கு ரூ.35ம் கொடுத்து வியாபாரிகள் எடுத்துச் செல்கின்றனர். இவை பிற மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

இதனால் விவசாயிகள் வைக்கோலை வயலிலேயே விற்பனை செய்து உடனடியாக பணமாக பெற்றுக் கொள்கின்றனர். இதற்கிடையில் சித்திரக்குடியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து குறுவை நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் விவசாயிகள் நெல்லை சாலையில் காயவைத்து பின்னர் கொள்முதல் நிலையத்திற்கு அனுப்புகின்றனர்.

இதனால் தற்போது வரை நாள் ஒன்றுக்கு 500 மூட்டைகள் வீதம் பிடிக்கப்படுகிறது. இனி வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர். மேலும் வைக்கோல் கட்டுகளை வயலிலே வந்து வியாபாரிகள் வாங்கி செல்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: