நெல்லை: நெல்லை டவுன் நெல்லையப்பர் நெடுஞ்சாலை பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், நேற்று ஆர்ச் அருகே பழமையான மரத்தின் கிளைகள் அகற்றப்பட்டன. சாலை பணிகள் காரணமாக சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி நிலவியது. நெல்லை டவுன் பகுதியில் நெல்லையப்பர் நெடுஞ்சாலை பணிகள் கடந்த சில தினங்களாக நடந்து வருகிறது. இச்சாலையை விரிவாக்கம் செய்வதோடு, சாலையின் ஓரப்பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. நேற்று சாலை விரிவாக்கத்திற்காக ஆர்ச் அருகே பழமைவாய்ந்த வேப்பமரத்தின் கிளைகள் வெட்டி அகற்றப்பட்டன. மேலும் ஆர்ச் தொடங்கி புரம் வரை சாலையில் தார் வைக்கும் பணிகளும் நடந்தன. இதனால் சாலையின் ஒருபுறமாக வாகனங்கள் செல்லும் நிலை ஏற்பட்டது.