தாவரவியல் பூங்காவில் மலர் அலங்கார பணி நிறைவு

ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் அலங்கார பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்க வாய்ப்புள்ளது. சுற்றுலா நகரமான ஊட்டிக்கு தினமும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். எனினும், முதல் மற்றும் 2ம் சீசன் சமயங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். முதல் சீசன் போது ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதனை பல லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.

2ம் சீசன் போது மலர் கண்காட்சி நடத்தவில்லை என்ற போதிலும் பூங்காவில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு மலர்கள் பூத்துக் காணப்படும். மேலும், பல ஆயிரம் தொட்டிகளில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு மலர் தொட்டிகள் மாடங்களில் அலங்கரித்து வைக்கப்படும். அதேபோல், புல் மைதானங்களிலும் பல்வேறு மலர் அலங்காரங்கள் மேற்கொள்ளப்படும். இம்முறையும் 2வது சீசனுக்காக தாவரவியல் பூங்கா முழுவதிலும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 15 ஆயிரம் தொட்டிகளில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இந்த மலர் தொட்டிகளை கொண்டு பூங்காவில் உள்ள மாடங்களில் மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

 

மேலும், பூங்காவில் பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. மலர் அலங்கார பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், இன்று முதல் சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. பூஜை விடுமுறை மற்றும் காலாண்டு தேர்வு விடுமுறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த மலர் அலங்காரங்களை கண்டு ரசிக்கலாம்.

Related Stories: