ஒசூர்: ஓசூர் வனக்கோட்டத்தில் தாமாக முன்வந்து ஒப்படைக்கப்பட்ட 111 கள்ளத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்த வனத்துறையினர், நேற்று ஓசூர் ஏடிஎஸ்பி அலுவலகத்தில் ஒப்படைத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டத்தில் யானை உள்ளிட்ட வன விலங்குகளை, கள்ளத்துப்பாக்கி வைத்துள்ளவர்கள் வேட்டையாடி வருவதை தடுக்கும் பொருட்டு, கள்ள துப்பாக்கி வைத்திருப்பவர்கள், வனத்துறை அலுவலர்களிடமோ, ஊர் முக்கியஸ்தர்களிடமோ, கடந்த 9ம் தேதி முதல் 19ம் தேதிக்குள் தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும் என ஓசூர் வனக்கோட்ட வனஉயிரின காப்பாளர் கார்த்திகேயனி வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும், ஓசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, உரிகம், ஜவளகிரி, ராயக்கோட்டை மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட 7 வனச்சரகங்களிலும், மலை கிராமங்கள் மற்றும் காப்புக்காடுகளை சுற்றியுள்ள கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.