புதுடெல்லி: முப்படைகளின் தலைமை தளபதியாக நேற்று பொறுப்பேற்ற அனில் சவுகான், நாட்டின் பாதுகாப்பை இன்னும் பலப்படுத்தி அனைத்து சவால்களையும் சந்திக்க தயார் என சூளுரைத்தார். ராணுவம், விமானப்படை, கப்பற்படை என முப்படைகளை ஒருங்கிணைத்து செயல்படும் வகையில் முப்படைகளின் தலைமை தளபதி பதவி, கடந்த 2019ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இதன் முதல் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்ட பிபின் ராவத், கடந்தாண்டு நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார். பின்னர், கடந்த 9 மாதங்களாக இப்பதவி காலியாக இருந்தது. இந்நிலையில், முப்படைகளின் தலைமை தளபதியாக ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் தளபதி அனில் சவுகான் நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டார்.