பிரதமர் பிரயுத் சான் பதவியில் நீடிக்கலாம்: தாய்லாந்து நீதிமன்றம் அதிரடி

பாங்காக்: தாய்லாந்தில் கடந்த 2014ம் ஆண்டு நிலவிய அரசியல் நெருக்கடியினால் பிரதமராக இருந்த இங்லக் ஷினவத்ரா,  ராணுவ புரட்சி மூலம் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, அப்போதைய ராணுவ தளபதி பிரயுத் சான் ஓசா பிரதமராக பதவியேற்றார். பின்னர். 2019ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் பிரதமராக பதவியேற்றார். இதனிடையே, தாய்லாந்தில் யாரும் 8 ஆண்டுகளுக்கு மேல் பிரதமர் பதவியில் நீடிக்கக் கூடாது என்ற சட்டம், 2017ம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின்படி, பிரயுத்தின் 8 ஆண்டு பிரதமர் பதவிக்காலம் கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் முடிந்து விட்டதாக, தாய்லாந்து அரசியல் சாசன நீதிமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் வழக்கு தொடுத்தனர்.

ஆனால், ‘அரசியல் சாசனம் திருத்தப்பட்ட 2017ம் ஆண்டு முதல்தான், இந்த விதிமுறை அமலுக்கு வரும் என்பதால், 2025ம் ஆண்டு வரையில் பிரயுத் பிரதமர் பதவியில் நீடிக்கலாம்,’ என்று அவருடைய சார்பில் வாதிடப்பட்டது. இதனை விசாரித்த 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, பிரயுத் தரப்பு வாதத்தை ஏற்றது. `திருத்தப்பட்ட அரசியல் சாசனத்தின்படி, பிரதமர் பிரயுத் 8 ஆண்டுகள் (2025 வரை) பதவியில் நீடிக்கலாம்,’ என்று உத்தரவிட்டது.

Related Stories: