ஆர்.எஸ்.எஸ். பேரணியை நவம்பர் 6ல் நடத்த அனுமதி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க மறுத்த காவல்துறை உத்தரவை எதிர்த்து 50க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அனுமதி வழங்கவில்லை என்று காவல்துறைக்கு எதிராக ஆர்எஸ்எஸ் அமைப்பினர் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஆர்.எஸ்.எஸ். தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் ஆஜராகி, ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கும்படி நிபந்தனைகளை வகுத்து நீதிமன்றம் உத்தரவிட்டும், காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா தடை செய்யப்பட்டதால் நடைபெறும் போராட்டங்களை காரணம் காட்டி, நீதிமன்றம் அனுமதி வழங்கிய ஊர்வலத்திற்கு போலீஸ் அனுமதி மறுக்க முடியாது. ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்க வேண்டும் என்பதற்காகவே சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது என்றார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தரப்பில் மற்றொரு மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா ஆஜராகி, மகாத்மா காந்தியின் பிறந்தநாளை கொண்டாடும் வகையிலான ஊர்வலத்திற்கு தமிழகத்தில் மட்டும் எவ்வாறு அனுமதி மறுக்க முடியும் என்றார்.

தமிழக காவல்துறை தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, தேசிய புலனாய்வு முகமையின் சோதனை, பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மீதான தடை, பாஜ மற்றும் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டுவீச்சு ஆகியவற்றை கருத்தில் கொண்டு காவல்துறை முடிவெடுத்துள்ளது. குறிப்பாக சமூக விரோதிகள் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கவும், பொது சொத்துகளை சேதப்படுத்தவும் வாய்ப்புள்ளதாக மத்திய மற்றும் மாநில புலனாய்வு அமைப்புகள் அளித்த தகவலின் அடிப்படையில் அனுமதி மறுக்கப்பட்டது.   

மத்திய உளவுத்துறையின் அறிக்கைகளை புறந்தள்ளிவிட முடியாது. பொது மக்களின் நலன் தான் உச்சபட்ச முக்கியத்துவம் வாய்ந்த விஷயம். அதை கருத்தில் கொண்டு காவல்துறை செயல்படுகிறது. காந்தி ஜெயந்தி கொண்டாடக்கூடாது என்று போலீஸ் தரப்பு கூறுவதாக ஆர்.எஸ்.எஸ். தவறாக உருவகப்படுத்தி வருகிறது. நாதுராம் கோட்சேவை ஒரு கையில் ஏந்துபவர்களாக உள்ள ஆர்.எஸ்.எஸ். அவரால் கொல்லப்பட்ட மகாத்மா காந்தியின் பிறந்தநாளை கொண்டாட அனுமதி கேட்க முடியாது. அக்டோபர் 1ம் தேதியிலிருந்தே அமைச்சர் கலந்து கொள்ளக் கூடிய உள்ளரங்கு கூட்டத்திற்கே அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் ஊர்வலத்தை எப்படி அனுமதிக்க முடியும் என்றார்.

அப்போது நீதிபதி குறுக்கிட்டு, காந்தி ஜெயந்தி அன்று ஊரவலம் செல்ல மட்டும்தான் அனுமதி மறுக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு விளக்கம் அளித்த காவல்துறை தரப்பு வழக்கறிஞர், தற்போதைய சூழலில் அன்றைய தினத்திற்கு பதிலாக மாற்றுத் தேதியில் அனுமதி கோரினால் பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என்றார். அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா தடைக்கு பிறகு சென்னை வடக்கு மண்டலத்தில் மட்டும் பாஜவுக்கு சொந்தமான 402 வீடுகள், 65 வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தற்போதைய செய்திகள், காவல்துறை விளக்கம், மனுதாரர்களுக்கு சொந்தமான இடங்களில் அச்சுறுத்தல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மாற்று தேதியில் ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பு முன் வரவேண்டும். நவம்பர் 6ம் தேதி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை நடத்த காவல்துறை அனுமதி வழங்க வேண்டும். வழக்கு அக்டோபர் 31ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. அதற்குள் அனுமதி வழங்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மறு ஆய்வு செய்ய கோரி திருமாவளவன் மனு: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதியளித்து பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி விசிக தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை ஐகோர்ட் தள்ளிவைத்துள்ளது.

Related Stories: