காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கார்கே, சசிதரூர், திரிபாதி போட்டி: கடைசி நாளில் வேட்புமனு தாக்கல்; விலகினார் திக் விஜய் சிங்

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட மல்லிகார்ஜூனா கார்கே, சசிதரூர், கே.என். திரிபாதி ஆகியோர் கடைசி நாளில் வேட்புமனு தாக்கல் செய்தனர். அசோக் கெலாட், திக்விஜய் சிங் ஆகியோர் போட்டியிலிருந்து விலகிக் கொண்டனர். காங்கிரஸ் தலைவர் தேர்தல் வரும் 17ம் தேதி நடக்க உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் 19ம் தேதி முடிவு அறிவிக்கப்பட உள்ளது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு கட்சித் தலைவரை தேர்வு செய்ய, ஜனநாயக முறைப்படி நடக்கும் இத்தேர்தலில் ராகுல் உட்பட காந்தி குடும்பத்தில் இருந்து யாரும் போட்டியிடவில்லை. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 24ம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் தொடங்கும் முன்பாகவே, திருவனந்தபுரம் எம்பி சசிதரூர் தேர்தலில் போட்டியிடுவதை உறுதி செய்தார்.

அதே சமயம், கட்சி மேலிடத்தின் ஆதரவுடன் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போட்டியிடுவதாக இருந்தது. ஆனால், தேர்தலில் கெலாட் வெற்றி பெற்றால், அடுத்த ராஜஸ்தான் முதல்வர் யார் என்பதை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டது. இந்த விவகாரத்தால் கெலாட், சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், கெலாட்டுக்கு பதிலாக சோனியாவின் ஆதரவுடன் திக்விஜய் சிங் அல்லது ஏ.கே.அந்தோணி போட்டியிடலாம் என நேற்று முன்தினம் தகவல்கள் வெளியாகின.

இந்த பரபரப்பான சூழலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான நேற்று, திடீர் திருப்பமாக கட்சியின் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரும் மூத்த தலைவருமான மல்லிகார்ஜூனா கார்கே வேட்புமனு தாக்கல் செய்தார்.

 டெல்லி ராஜ்கட்டில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின், சசி தரூரும் வேட்புமனு தாக்கல் செய்தார். ஜார்கண்ட் மாநில முன்னாள் அமைச்சர் கே.என்.திரிபாதி, கட்சியின் மத்திய தேர்தல் ஆணைய தலைவர் மதுசூதன் மிஸ்திரியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். கடைசி நாளில் 3 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதே சமயம், கடைசி கட்டத்தில் திக்விஜய் சிங் போட்டியிடாமல் விலகிக் கொண்டார். இதன் மூலம், கார்கே, சசிதரூர், திரிபாதி கட்சித் தலைவர் தேர்தலுக்கான போட்டியில் களமிறங்கி உள்ளனர். வேட்புமனு மீதான பரிசீலனை இன்று நடக்கும். வரும் 8ம் தேதி வரை மனுக்களை வாபஸ் பெறலாம்.

* கர்நாடகா மாநிலம், பைதர் மாவட்டம், வராவட்டி பகுதியில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் மல்லிகார்ஜூனா கார்கே. தற்போது இவருக்கு வயது 80. தலித் சமூகத்தை சேர்ந்த இவர் அரசியலில் 50 ஆண்டுகால அனுபவம் மிக்கவர்.

* தொடர்ச்சியாக 9 முறை எம்எல்ஏவாக வெற்றி பெற்றுள்ளார்.

* 2014 மக்களவை தேர்தலில் கர்நாடகாவில் மோடி அலை பலமாக வீசிய போது கூட, குல்பர்கா தொகுதியில் 74 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வென்றார்.

* தோல்வியே சந்திக்காத தலைவராக இருந்த கார்கே, கடந்த 2019 மக்களவை தேர்தலில் குல்பர்கா தொகுதியில் முதல் முறையாக தோல்வி கண்டார்.

* காந்தி குடும்பத்திற்கு மிக நெருக்கமான இவர், கடந்த 1969ம் ஆண்டு காங்கிரசில் இணைந்தவர்.

* கார்கேக்கு அமோக ஆதரவு

கட்சி மேலிடத்தின் மிகவும் விசுவாசமான தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே. எதிர்க்கட்சி தலைவர்களுடனும் நல்லுறவை பராமரித்து வருபவர். இதன் காரணமாக, சோனியா ஆதரவு பெற்ற வேட்பாளராக கார்கே களமிறக்கப்பட்டுள்ளார். இவருக்கு வழி விட்டே தேர்தலில் போட்டியிடாமல் விலகிக் கொண்டதாக திக்விஜய் சிங்கும், கட்சியின் அனைத்து மூத்த தலைவர்களும் சேர்ந்து கார்கேவை நிறுத்த முடிவு செய்ததாக அசோக் கெலாட்டும் நேற்று பேட்டி அளித்தனர். மேலும், கட்சி தலைமை குறித்து விமர்சித்த ஜி23 எனப்படும் கட்சியின் 23 தலைவர்களில் ஒரு குழுவினர் நேற்று தனியாக ஆலோசனை நடத்தினர். அதன் பின் பேட்டி அளித்த மூத்த தலைவர் மணிஷ் திவாரி, ஆனந்த் சர்மா ஆகியோர், ‘‘நாங்கள் கார்கேக்கு முழு ஆதரவு தருகிறோம்’’ என்றனர். கார்கே தாக்கல் செய்த வேட்பு மனுவில், ஏ.கே.அந்தோணி, அசோக் கெலாட், திக் விஜய் சிங், பூபேந்தர் ஹூடா, மணிஷ் திவாரி, ஆனந்த் சர்மா, சல்மான் குர்ஷித், அம்பிகா சோனி, முகுல் வாஸ்னிக் போன்ற உயர்மட்ட தலைவர்கள் 30 பேர் அவரை பரிந்துரைத்து கையெழுத்திட்டு உள்ளனர். இதனால், கார்கே வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.

* காந்தி குடும்பத்தினர் ஆதரவு தரவில்லை

வேட்புமனு தாக்கல் செய்த சசிதரூர் அளித்த பேட்டியில், ‘‘இது எதிராளிகளுக்கு இடையேயான யுத்த களமல்ல. நண்பர்களுக்கு இடையேயான நட்புறவு போட்டி. இதில் அதிகாரப்பூர்வ வேட்பாளர் என்று யாருமில்லை. தேர்தலில் யார் ஒருவரையும், காந்தி குடும்பத்தினர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரிக்கவில்லை என பலமுறை உறுதியாக கூறி உள்ளனர். இந்த தேர்தல் சுதந்திரமான நியாயமான முறையில் நடைபெறுவதை உறுதி செய்வதில் கட்சி உறுதியாக இருக்கிறது. கார்கே போட்டியிடுவதில் நான் எந்த ஆச்சரியமும்படவில்லை’’ என்றார்.

* தேர்தல் வாக்குறுதியில் சர்ச்சையான சசிதரூர்

சசிதரூர் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். இந்நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்ததைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதி படிவத்தால் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார். கட்சி தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றால், தனது எதிர்கால திட்டங்கள் எப்படியிருக்கும், கட்சியில் செய்யும் சீர்த்திருத்தம், அதிகார பரவலாக்கம் குறித்த விளக்கத்தினை சசிதரூர் தந்துள்ளார். அதில் இடம் பெற்றுள்ள இந்திய வரைபடத்தில் காஷ்மீர் மாநிலம் நீக்கப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையானது. இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் பலர் கண்டனம் தெரிவித்தனர்.

* சசிதரூரை ஆதரிக்காத ஜி23 தலைவர்கள்

ஜி-23 தலைவர்களில் யாருமே சசிதரூரை முன்மொழியவில்லை என கூறப்படுகிறது. கட்சித் தலைமையை விமர்சித்த இக்குழுவில் சசிதரூரும் ஒருவர். ஆனால், ஜி23 தலைவர்கள் ஒட்டுமொத்தமாக கார்கேவை முன்மொழிந்து அவரது வேட்புமனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.

Related Stories: