சென்னை: ‘கழிவுநீர் தொட்டி இடிந்து விழுந்து சிறுமிகள் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட பண்ணைப்புரம் பேரூராட்சி பெண்கள் சுகாதார வளாகத்தில் உள்ள கழிவுநீர் தொட்டி இடிந்து விழுந்ததில் 7 வயது சிறுமி நிகிதா , 5 வயது சிறுமி சுப ஆகிய இரண்டு குழந்தைகள் உயிரிழந்தார்கள் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தேன். கழிவு நீர் தொட்டி மேல்பகுதி சேதம் அடைந்த நிலையில், அதனை சரி செய்யக் கோரி அப்பகுதி மக்கள் பலமுறை புகார் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. 2 குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறேன். இதுபோன்ற அசம்பாவிதங்கள் ஏற்படாதவாறு திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.