டெல்லி: நீட் தேர்வின் தாக்கம் குறித்து முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கைக்கு தடை கோரி தொடுக்கப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. முதற்கட்டமாக நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு 85 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் கருத்து கேட்டு கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதலமைச்சரிடம் 165 பக்க அறிக்கையாக சமர்ப்பித்தது.