மும்பை: எங்களுக்குள் அரசியல் மோதல் அதிகரித்துள்ளதால் இனிமேல் அண்ணன் - தங்கை உறவு கூட இல்லை என்று தனஞ்சய் முண்டே ஆவேசமாக தெரிவித்தார். மகாராஷ்டிராவில் கடந்த 2019ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பார்லி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான பங்கஜா முண்டேவை, அவரது சகோதரரும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான தனஞ்சய் முண்டே தோற்கடித்தார். இதனால் பங்கஜா முண்டே கடும் அதிருப்தியில் இருந்தார்.
சமீபத்தில் சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் நிலையில், தலைமை மீதான அதிருப்தியால் பங்கஜா முண்டே பாஜகவில் இருந்து விலகுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தனஞ்சய் முண்டே தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘எங்களுக்கு இனிமேல் அண்ணன் - தங்கை உறவு இல்லை. நாங்கள் இருவரும் அரசியல் எதிரிகள். அவர் (பங்க்ஜா முண்டே) தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருகிறார். அதனால் அவர் தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்’ என்றார்.