டெரகோட்டா மனித முகம், பறவை தலை கண்டெடுப்பு

சிவகாசி: விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே, விஜயகரிசல்குளத்தில் உள்ள வைப்பாற்றின் வடகரை மேட்டுக்காடு பகுதியில், கடந்தாண்டு பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது. இதையெடுத்து அப்பகுதிக்கு தொல்லியல்மேடு என பெயரிடப்பட்டு, தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை சார்பில், கடந்த மார்ச் மாதம் முதற்கட்ட அகழாய்வு பணிகளை தொடங்கின. தொல்லியல் மேட்டில் ஏற்கனவே 10 குழிகள் தோண்டப்பட்டு, நடந்த அகழாய்வில் டெரகோட்டா எனப்படும் சுடுமண்ணாலான குவளை உள்ளிட்ட பல வகையான கலைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. தற்போது சுடுமண்ணாலான பறவை தலை, மனித முகம் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தொல்லியல் ஆய்வாளர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகையில், ‘‘முதற்கட்ட அகழாய்வு பணியின்போது கிடைத்த பொருட்கள், பல நூற்றாண்டுகளுக்கு முன் நமது முன்னோர்கள் கலை, கலாச்சாரம் சார்ந்து வாழ்ந்ததற்கான அடையாளமாக உள்ளது. இங்கு கிடைத்த பழங்கால பொருட்கள் அனைத்தும் தொல்லியல் துறையின் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இதன் முடிவில் வெம்பக்கோட்டை பகுதியில், எந்த நூற்றாண்டை சேர்ந்த மனிதர்கள் வாழ்ந்தார்கள் என்பது குறித்த  தகவல்கள் தெரிய வரும்’’ என்றார்.

Related Stories: