இலங்கை கடற்படை அட்டகாசம் தொடர்கிறது: ராமேஸ்வரம் மீனவர்கள் மீண்டும் விரட்டியடிப்பு

ராமேஸ்வரம்: மீன்பிடிக்க கடலுக்கு சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மீனவர்கள் குறைவான மீன்களுடன் நேற்று கரை திரும்பினர். புரட்டாசி மாதம் இறைச்சி மற்றும் மீன்கள் விற்பனை குறைவாக இருக்கும் என்பதால் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் 150க்கும் குறைவான விசைப்படகுகளே கடலுக்கு சென்றன.

இரவில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்துள்ளதாக கூறி, மீனவர்களை விரட்டியடித்தனர். மேலும் அப்பகுதிக்கு மீனவர்கள் வந்து விடாதபடி, இரவு முழுவதும் இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பல்களில் சுற்றி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதனால் அச்சமடைந்த மீனவர்கள், அங்கிருந்து உடனடியாக வேறு பகுதிகளுக்கு சென்று இரவு முழுவதும் மீன் பிடித்து, நேற்று காலை குறைவான மீன்களுடன் கரை திரும்பினர்.

இதுகுறித்து ராமேஸ்வரம் மீனவர்கள் கூறுகையில், ‘‘புரட்டாசி மாதம் என்பதால் ஏற்கனவே மீன்களுக்கு உரிய விலை கிடைக்க வில்லை. இதனால் குறைவான எண்ணிக்கையிலேயே கடலுக்கு சென்றோம். அதிலும் மீன் பிடிக்க விடாமல் தடுத்து இலங்கை கடற்படையினர் மீண்டும், மீண்டும் விரட்டி வருகின்றனர். இலங்கை கடற்படையினரின் இந்த கெடுபிடி தொடர்ந்தால், மீன்பிடித் தொழில் முற்றிலும் நசிந்து ராமேஸ்வரம் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும்.

இந்த பிரச்னைக்கு தீர்வு காண ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று வேதனையுடன் தெரிவித்தனர். மேலும் பாக் ஜலசந்தி கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மற்றும் தஞ்சையை சேர்ந்த மீனவர்களையும், இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததாக, கரை திரும்பிய ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: