கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை சரிவு: வரத்து அதிகரித்த காரணத்தால் விலை குறைந்ததாக தகவல்

சென்னை: கோயம்பேடு சந்தைக்கு வரத்து அதிகரித்த காரணத்தால் தொடர்ந்து விலை ஏற்றமாக இருந்த கேரட் மற்றும் பீன்ஸ் விலை தலா 40 ரூபாய் குறைந்து விற்பனையாகிறது. கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடிக்கு காய்கறிகள் வரத்து குறைந்து இருப்பதால், கடந்த 10 நாட்களாக காய்கறி விலை உயர்ந்து கேரட் 120 ரூபாய் வரையில், பீன்ஸ் 80 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக தென் மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வரத்து அதிகரித்த காரணத்தால், தற்போது விலை சற்று குறைந்துள்ளது.

குறிப்பாக கேரட் மற்றும் பீன்ஸ் விலை கணிசமாக குறைந்துள்ளது. ரூ.100 முதல் ரூ.140 வரை விற்பனை செய்யப்பட்ட கேரட் விலை குறைந்து ரூ.80-க்கு விற்கப்படுகிறது. 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட பீன்ஸ் 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கோயம்பேடு சந்தைக்கு வரத்து அதிகரித்த காரணத்தால் காய்கறி விலை குறைந்திருக்கிறது என வியாபாரிகள் தெரிவித்தனர். இன்றைய நிலவரப்படி தக்காளி ஒரு கிலோ ரூ.30 முதல் ரூ.32 வரையிலும், உருளை கிழங்கு ரூ.25 முதல் ரூ.34 வரையிலும், சின்ன வெங்காயம் ரூ.40 முதல் ரூ.60 வரையிலும் விற்கப்படுகிறது. இதே நிலையில் காய்கறி வரத்து தொடர்ந்தால், மேலும் சில நாட்களுக்கு காய்கறி விலையில் மாற்றம் இருக்காது என வியாபாரிகள் தெரிவித்தனர்.   

Related Stories: