காந்திநகர் - மும்பை மார்க்கத்தில் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

குஜராத்: இந்திய ரயில்வே துறையை நவீனப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு சமீபகாலமாக செயல்பட்டு வருகிறது. இந்திய ரயில்வே துறையில் மிகவும் அதிவேக ரயிலாகவும், மிகவும் சொகுசான ரயிலாகவும் வந்தே பாரத் ரயில் இயங்கி வருகிறது. இந்த நிலையில், நாட்டின் மூன்றாவது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார்.

குஜராத் தலைநகர் காந்திநகரில் இருந்து மகாராஷ்ட்ரா தலைநகர் மும்பை சென்ட்ரல் வரை வரை இந்த புதிய வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் சேவையின் தொடக்க விழாவிற்காக குஜராத் செல்லும் பிரதமர் மோடி, அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் கொடியசைத்து வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்துள்ளார்.

நாட்டின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது. டெல்லியில் இருந்து புறப்பட்டு கான்பூர் – அலகாபாத் வழியாக வாரணாசி வரையில் இந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி நடப்பாண்டிற்கான சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் ஆற்றிய உரையில், நாட்டின் ஒவ்வொரு பகுதிகளையும் இணைக்கும் விதத்ததில் 75 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

வந்தே பாரத் ரயிலில் பல்வேறு சேவைகள் இருப்பதால் அந்த ரயிலின் கட்டணமும் மற்ற ரயில்களை காட்டிலும் அதிகளவில் உள்ளது. மும்பை முதல் அகமதாபாத் வரையிலான சிறப்பு வகுப்பு கட்டணம் ரூபாய் 2 ஆயிரத்து 349 ஆகும். சேர் கார் டிக்கெட் ரூபாய் 1, 144 ஆகும் என்று தெரிவித்துள்ளார்.

வந்தே பாரத் ரயில் வேகத்திலும், சேவையிலும், சுத்தத்திலும் மற்றும் பாதுகாப்பிலும் மற்ற ரயில்களை காட்டிலும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. வந்தே பாரத் ரயில் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரயில் ஆகும். வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்வதன் மூலமாக பயண நேரம் 25 சதவீதத்தில் இருந்து 45 சதவீதம் வரையிலும் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் இருந்து வாரணாசி செல்லும் வந்தே பாரத் ரயில் வெறும் 8 மணி நேரத்தில் பயணிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது மற்ற ரயில்களை காட்டிலும் 40 முதல் 50 சதவீதம் அதிக வேகம் ஆகும். வந்தே பாரத் ரயிலில் உள்ள ஒவ்வொரு பெட்டியிலும் தானியங்கி கதவுகள், இணைய வசதி, சொகுசான இருக்கை வசதி, கழிவறை வசதிகள் உள்ளது.

ஒவ்வொரு பெட்டியிலும் உணவுக்கூடம் இயங்கி உணவுகள், குளிர்பானங்கள் விநியோகிக்கப்படுகிறது. பயணிகளின் வசதிக்கு ஏற்ப வெப்பநிலையை மாற்றிக்கொள்ளலாம். ஒவ்வொரு வந்தே பாரத் ரயிலிலும் 1128 பயணிகள் பயணிக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

Related Stories: