லட்சக்கணக்கான வெளிநாட்டினருக்கு குடியுரிமை வழங்கும் மசோதா அமெரிக்கா நாடாளுமன்றத்தில் தாக்கல்

வாஷிங்டன்: லட்சக்கணக்கான வெளிநாட்டினருக்கு குடியுரிமை வழங்குவதற்கான கிரீன் கார்டு வழங்கும் மசோதா அமெரிக்கா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் குடியேறியுள்ள இந்தியர்கள் உள்ளிட்ட பிற நாட்டவர்கள் அங்கு நிரந்தரமாக வசிப்பதற்கு வழங்கப்படும் ஆவணம் கிரீன் கார்டு என்று அழைக்கப்படுகிறது. சமீப காலமாக கிரீன் கார்டு வழங்குவதற்கு அந்நாட்டில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில், அமெரிக்காவில் எச்-1பி  விசா மற்றும் நீண்ட காலமாக விசா வைத்திருப்போர் குடியுரிமை பெற ஏதுவாக கிரீன் கார்டு வழங்க பைடன் அரசு திட்டமிட்டுள்ளது.

இதன் தொடர்பான மசோதாவை நேற்று முன் தினம் அமெரிக்க நாடாளுமன்றம் செனட் சபையில் ஆளும் ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் அலெக்ஸ் பாடில்லா, எலிசபத் வாரன், பென் ரே லூஜன் ஆகியோர் அறிமுகம் செய்தனர். இதுபற்றி அலெக்ஸ் பாடில்லா கூறும்போது, காலாவதியாகிப்போன நமது குடியேற்ற அமைப்பு, எண்ணற்ற மக்களை பதிப்பாக்குள்ளாக்குகிறது. அமெரிக்கா பொருளாதாரத்தையும் பாதிக்கிறது.

எங்கள் மசோதா, 35 ஆண்டுகளில் முதல்முறையாக பதிவேடு கட்-ஆப் தேதியை புதுப்பிக்கும். இதனால், அதிகளவில் புலம் பெயர்ந்தோர் சட்டப்பூர்வ நிரந்தர குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம் என தெரிவித்தார். மேலும், இந்த மசோதா லட்சக்கணக்கான புலம் பெயர்ந்தோர் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்ததும். பல்லாண்டு காலமாக அமெரிக்காவில் வாழ்ந்து, வேலை செய்து, பங்களிப்பு செய்கிறவர்கள் நிச்சயமற்ற எதிர்காலம் குறித்து அச்சம் இன்றி சுதந்திரமாக வாழ வழிபிறக்கும் என்றும் குறிப்பிட்டார்.  

இதையடுத்து பிரிநிதிகள் சபையிலும் இந்த  மசோதாவை ஜோ லோப்கிரென் என்ற எம்.பி. அறிமுகம் செய்துள்ளார். அமெரிக்காவில் குறைந்தது 7 ஆண்டுகள் வசித்து வருபவர்களுக்கு கிரீன் கார்டு கிடைக்க இந்த மசோதாவில் வகை செய்யப்பட்டிருக்கிறது. இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறினால் நீண்ட காலமாக அமெரிக்காவில் வேலை செய்து வரும் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டினருக்கு நிரந்தர குடியுரிமை கிடைக்கும். 

Related Stories: