புதுடெல்லி: சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள லோன் ஆப்களுக்கு எதிரான பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சீன கடன் ஆப் நிறுவனங்களில் நடத்திய சோதனையின்போது பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் கடன் ஆப் நிறுவனங்களின் ஆன்லைன் கணக்குகளில் அதிக அளவிலான நிலுவை தொகைகள் பராமரிக்கப்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து சிபஸ், ரசார்பே, கேஷ்ப்ரீ உள்ளிட்டவற்றின் ரூ46.67 கோடியை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கினார்கள். தற்போது, 2வது முறையாக சீன லோன் ஆப் நிறுவனங்களின் ரூ9.82 கோடியை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
இது தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆப் அடிப்படையிலான எச்பிஇசட் என்ற டோக்கனை தவறாக பயன்படுத்தியது தொடர்பான விசாரணையின் அடிப்படையில் சீன கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு நிறுவனங்களின் ஆன்லைன் கணக்கில் பராமரிக்கப்பட்டு வந்த ரூ9.82 கோடி முடக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சீன கட்டுப்பாட்டில் உள்ள கோமைன் நெட்வொர்க் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட், மொபிக்ரெட் டெக்னாலஜி, அலியேயே நெட்வொர்க் டெக்னாலஜி, விகேஷ் டெக்னாலஜி, லார்டிங் பிரைவேட் லிமிடெட், மேஜிக் பர்ட் டெக்னாலஜி, ஏசிபெர்ல் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களின் ஆன்லைன் கணக்குகளில் இருந்த ரூ9.92கோடியை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர்.