தென் மாவட்டங்களில் பலத்தை காட்ட திட்டம்; ஓபிஎஸ்- சசிகலா பகுதிகளில் எடப்பாடி சுற்றுப்பயணம் துவக்கம்: விருதுநகரில் கருப்புகொடி காட்ட முயன்ற 35 பேர் கைது

மதுரை: தென் மாவட்டங்களில் ஓ.பி.எஸ், சசிகலாவுக்கு செல்வாக்கு அதிகம் என்று கூறப்படும் நிலையில், அங்கும் தொண்டர்கள் தன் பக்கம்தான் என்று பலத்தை காட்டுவதற்காக எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தை நேற்று துவக்கினார்.  விருதுநகரில் அவருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 35 பேர் கைது செய்யப்பட்டனர். அதிமுக தற்போது இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவு என இரண்டாக உடைந்துள்ளது. இந்நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமியுடன் மேற்கு மாவட்டத்தினரே அதிகளவில் உள்ள நிலையில், தென்மாவட்டத்தினரிடம் ஓபிஎஸ் மற்றும் சசிகலாவிற்குத்தான் செல்வாக்கு அதிகம் என்ற சூழல் உள்ளது.

இது உண்மை இல்லை என்பதை நிரூபித்திட தென்மாவட்டங்களில் தற்போது எடப்பாடி பழனிசாமி தனது சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். மதுரை, விருதுநகரில் நேற்று நடந்த பொதுக்கூட்டங்களில் பங்கேற்க அவர் நேற்று காலை விமானத்தில் மதுரை வந்தார். விமானநிலையத்தில் அதிமுக நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு தாமரை மாலை அணிவித்து, கையில் வேல் கொடுத்து வரவேற்றனர். இது, அதிமுக தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதுதவிர, மதுரை  விமான நிலையத்தில் பயணிகள் வாகனம் நிறுத்தும் இடத்தில் அதிமுகவினர்  திடீரென முன் அனுமதியின்றி சர்ச்சைக்குரிய வகையில் மேடை அமைத்து, வரவேற்பு அளித்தனர்.

தென் மாவட்டங்களின் பல பகுதிகளில் எடப்பாடி பழனிசாமி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. கடந்த ஆட்சியின் போது, இட ஒதுக்கீடு விஷயத்தில் அவரது நடவடிக்கையை கண்டித்து ஒரு சமூகத்தினர் போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர். இதற்கிடையில், சிவகாசி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி நேற்று காலை வந்தார்.

முன்னதாக, எடப்பாடி பழனிசாமி வருகைக்கு ஓபிஎஸ் அணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும், ஓபிஎஸ் ஆதரவாளரான மாவட்டச் செயலாளர் பாலகங்காதரன் தலைமையில் விருதுநகர் - சிவகாசி ரோட்டில் கருப்பு கொடிகளுடன் ஏராளமானோர் திரண்டனர். ‘உண்மையான பொதுச் செயலாளர் ஓபிஎஸ்தான். எடப்பாடிக்கு இங்கே வேலை இல்லை. வருகையை கண்டிக்கிறோம்’ என்று கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 35 பேரை ஆமந்தூர் போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

Related Stories: