ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் கட்டணம் ரூ20 ஆக உயர்வு: சென்னை ரயில்வே கோட்டம் அறிவிப்பு

சென்னை: சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்பட 8 முக்கிய ரயில் நிலையங்களில் நாளை முதல் பிளாட்பார்ம் கட்டணமாக ரூ.20 வசூலிக்கப்படும் என்று சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிக்கை: பண்டிகை காலம் என்பதால் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும். மேலும் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள். இதனால் பயணிகளின் நலன் கருதி, கூட்ட நெரிசலை தவிர்க்கவும், பயணம் செய்பவர்கள் பாதுகாப்பாக செல்லவும் நாளை முதல் (அக். 1ம் தேதி) அடுத்த ஆண்டு ஜனவரி 31ம் தேதி வரை பிளாட்பார்ம் கட்டணம் ரூ.10லிருந்து ரூ.20 ஆக உயர்த்தப்படுகிறது.

மேலும், இந்த கட்டண உயர்வு சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர் மற்றும் ஆவடி ஆகிய 8 முக்கிய  ரயில் நிலையங்களுக்கு மட்டும் பொருந்தும். இதற்கு பயணிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: