வேளாண் துறையில் பயனடைந்த விவசாயிகளின் விவரம்; கிராம சபையில் வைக்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: அக்டோபர் 2ம் தேதி நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் வேளாண் துறை மூலம் பயனடைந்த விவசாயிகளின் விவரங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அக்டோபர் மாதம் 2ம் தேதி அன்று, தமிழகத்தில் உள்ள 12,525 கிராம பஞ்சாயத்துகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த கூட்டத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பாக ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துகளுக்கும் தனித்தனியான அலுவலர்கள் நியமிக்கப்பட்டு துறையின் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்படும்.

நடப்பு ஆண்டில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம், சர்க்கரை துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களில் பயனடைந்த விவசாயிகளின் விவரங்களும் கிராம வாரியாக தயாரிக்கப்பட்டு, கிராம சபை கூட்டத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். எனவே, அக்டோபர் 2ம் தேதி நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பங்கேற்று பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: