இசிஆர் அக்கரை பகுதியில் டாக்டர் வீட்டில் ரூ.35 லட்சம் நகை ரூ.5 லட்சம் ரொக்கம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு வலை

துரைப்பாக்கம்: இசிஆர் அக்கரை பகுதியில் டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.35 லட்சம் மதிப்புள்ள நகைகள், ரூ.5லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கிழக்கு கடற்கரை சாலை அக்கரை சி.கிளப். அவென்யூ பகுதியில் வசிப்பவர் டாக்டர் அபர் ஜிந்தால் (39). இவர், கடந்த சில தினங்களுக்கு முன், தனது வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்துடன் சொந்த ஊரான டெல்லி அருகே உள்ள நொய்டாவுக்கு சென்றார். அங்கிருந்து, நேற்று வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது, பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும், படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.35 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைரம், வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கம் கொள்ளை போனது தெரிய வந்தது. இதுகுறித்து, கானத்தூர் காவல் நிலையத்தில் அபர் ஜிந்தால் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்கள் வரவழக்கப்பட்டு கைரேகை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: