கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு இலங்கை கடற்படை அட்டூழியம்

ராமேஸ்வரம்: புரட்டாசி மாதம் இறைச்சி மற்றும் மீன்கள் விற்பனை குறைவாக இருக்கும் என்பதால் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று அதிகாலை 150க்கும் குறைவான விசைப்படகுகளே கடலுக்கு சென்றன. நேற்று இரவில்கச்சத்தீவு-தனுஷ்கோடிக்கு இடைப்பட்ட கடல் பகுதிகளில் இவர்களில் சில மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்துள்ளதாக கூறி, தமிழக மீனவர்களை விரட்டியடித்தனர். இதனால் அச்சமடைந்த ராமேஸ்வரம் மீனவர்கள், அங்கிருந்து உடனடியாக வேறு பகுதிகளுக்கு சென்று இரவு முழுவதும் மீன் பிடித்தனர்.

   

இன்று காலை குறைவான மீன்களுடன் கரை திரும்பிய ராமேஸ்வரம் மீனவர்கள் கூறுகையில், ‘‘புரட்டாசி மாதம் என்பதால் ஏற்கனவே மீன்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. இதனால் குறைவான எண்ணிக்கையிலேயே கடலுக்கு சென்றோம்.

அதிலும் மீன் பிடிக்க விடாமல் தடுத்து இலங்கை கடற்படையினர் தொடர்ந்து விரட்டி வருகின்றனர். இலங்கை கடற்படையினரின் இந்த கெடுபிடி தொடர்ந்தால், மீன்பிடித் தொழில் முற்றிலும் நசிந்து ராமேஸ்வரம் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும். இந்த பிரச்னைக்கு தீர்வு காண ஒன்றிய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

மேலும் நேற்று இரவு பாக் ஜலசந்தி கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மற்றும் தஞ்சையை சேர்ந்த மீனவர்களையும், இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததாக, கரை திரும்பிய ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: