போலீசார் விசாரணைக்கு பயந்து போதை மாத்திரை, மது அருந்தி சிகிச்சை பெற்றுவந்த ரவுடி சாவு

பெரம்பூர்: சென்னை அயனாவரம் ஏகாங்கிபுரம் 4வது தெருவை சேர்ந்தவர் ஆகாஷ் (20). இவர் மீது ஓட்டேரி, வியாசர்பாடி மற்றும் ராஜமங்கலம் ஆகிய காவல் நிலையங்களில் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கடந்த 20ம் தேதி இரவு பெரம்பூர் மங்களபுரம் சந்திரயோகி சமாதி தெரு பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பாலகிருஷ்ணமூர்த்தி (37) என்பவருக்கு சொந்தமான காரின் முன்பக்க கண்ணாடிகளை அடித்து உடைத்தார்.

இதுகுறித்து பாலகிருஷ்ணமூர்த்தி கொடுத்த புகாரின்படி, ஓட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜானி செல்லப்பா தலைமையில் போலீசார் வழக்குபதிவு செய்து கடந்த 21ம் தேதி ஆகாஷை கைது செய்தனர். இதன்பிறகு ஆகாஷின் அக்கா காயத்ரியிடம் போலீசார் எழுதி வாங்கிக்கொண்டு மறுநாள் காவல் நிலையம் அழைத்து வரவேண்டும் என்று கூறி ஆகாஷை அனுப்பி வைத்தனர். இதையடுத்து காவல்நிலையத்தில் ஆஜராகாமல் இருக்க அன்றைய தினம் அதிகமாக குடித்துவிட்டு போதை மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டு மயக்கம் அடைந்தார்.

இதையடுத்து ஆகாஷை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த நிலையில், இன்று காலை ஆகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார். ‘’கடந்த 8 நாட்களாக அவருக்கு சிகிச்சை அளித்தபோதிலும் மருந்து, மாத்திரைகளை அவரது உடல் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் சிறு வயதில் இருந்து அளவுக்கு அதிகமான போதை மாத்திரைகளை உட்கொண்டதால் ஆகாஷின் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டுள்ளது’ என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே ஆகாஷை போலீசார் அடித்துள்ளனர் என்று அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘’ஆகாஷ் மது போதையில் இருந்ததால் உடனடியாக அவரது வீட்டிற்கு தகவல் தெரிவித்து அவரது உறவினர் வந்து அழைத்து சென்றுள்ளார். அதற்கான அனைத்து ஆதாரங்களும் உள்ளன.

காவல் நிலையத்துக்கு ஆகாஷ் வருவது தெளிவாக பதிவாகியுள்ளது. கடந்த 8 நாட்களாக ஆகாஷ் மருத்துவமனையில் இருந்துள்ளார். போதை மாத்திரைக்கு அடிமையானவர் என்பது அவரது குடும்பத்திற்கு நன்றாக தெரியும். எனவே போலீசாரின் தவறு எதுவும் இல்லை’ என்றனர்.

Related Stories: