கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் மாதம்பதி கிராமத்தை சேர்ந்தவர் மணி (27), மரம் ஏறும் தொழிலாளி. இன்று காலை கொடமாண்டப்பட்டி கிராமத்தில் சுந்தரவடிவேல் என்பவரின் விவசாய தோட்டத்தில் தேங்காய் பறிப்பதற்காக மணி மரத்தில் ஏறினார். தேங்காய் பறித்துக்கொண்டிருந்தபோது அந்த பகுதியில் தென்னை ஓலை ஒன்று தொங்கிய படி இருந்துள்ளது. அந்த தென்னை ஓலையை மணி பிடித்து இழுத்துள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அவ்வழியாக தாழ்வாக சென்ற மின்ஒயரில் தென்னை ஓலை உரசியது. இதில் மணி மீது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரின் உடல் தென்னை மரத்தில் தொங்கிய நிலையில் இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் மற்றும் மணியின் உறவினர்கள் அங்கு திரண்டனர். மேலும் தகவல் அறிந்து விரைந்து வந்த மத்தூர் போலீசார் மற்றும் போச்சம்பள்ளி தீயணைப்பு துறை வீரர்கள் மணியின் உடலை மீட்டனர்.