ரூ.437 கோடியில் மதுரை, ராமேஸ்வரம் ரயில் நிலையங்கள் மறு சீரமைப்பு: பணிகள் விரைவில் துவக்கம்

மதுரை: ரூ.437 கோடியில் மதுரை, ராமேஸ்வரம் ரயில் நிலையங்கள் மறு சீரமைப்பு செய்யப்பட உள்ளது. இந்தியாவில் பல்வேறு ரயில் நிலையங்கள் நவீன வசதிகளுடன் மறு சீரமைப்பு செய்யப்பட இருக்கின்றன. தமிழகத்தில் சென்னை எழும்பூர், காட்பாடி, கன்னியாகுமரி, மதுரை, ராமேஸ்வரம் ஆகிய 5 ரயில் நிலையங்கள் நவீன வசதிகளுடன் மறுசீரமைக்கப்பட இருக்கின்றன. இந்த ரயில் நிலையங்களில், புதிய ரயில் நிலைய கட்டிடங்கள் கட்டப்பட இருக்கிறது.

இதற்கு ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியுள்ளார். மதுரை ரயில் நிலையம் ரூ.347 கோடி செலவில் மறுசீரமைக்கப்பட இருக்கிறது. மதுரை ரயில் நிலையத்தில் ரயில் பாதை பகுதிக்கு மேல் பயணிகள் காத்திருக்கும் அறை அமைய இருக்கிறது. அங்கிருந்து நேரடியாக அனைத்து நடைமேடைகளுக்கும் சென்று கொள்ளலாம். மதுரை ரயில் நிலைய மறு சீரமைப்பு பணிகளுக்காக ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்பட்டு, வேலை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளது வேலை ஆரம்பித்த நாளிலிருந்து 36 மாதங்களில் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் ரயில் நிலையம் ரூ.90 கோடி செலவில் மறு சீரமைக்கப்பட இருக்கிறது. இதற்கான ஒப்பந்ததாரரும் தேர்வு செய்யப்பட்டு, வேலை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் பணிகள் துவங்கப்பட உள்ளது. பணிகள் துவங்கிய நாளிலிருந்து 18 மாதங்களில் புதிய ரயில் நிலைய கட்டிடம் தயாராகிவிடும். மேலும் திருநெல்வேலி மற்றும் கும்பகோணம் ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு பணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதற்கான திட்ட மதிப்பீடு, திட்ட சாத்திய அறிக்கை ஆகியவற்றை தெற்கு ரயில்வே நிர்வாகம் தயாரித்து வருகிறது.

Related Stories: