சத்தியமங்கலம்: திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதால் அவ்வழியாக 5 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தமிழகம், கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரியம்மன் கோயில் அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இந்த மலைப்பாதை வழியாக 2 மாநிலங்களுக்கு இடையே வாகன போக்குவரத்து நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கோவையிலிருந்து பாக்கு பாரம் ஏற்றிய லாரி கர்நாடக மாநிலம் சிமோகா செல்வதற்காக திம்பம் மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்தது. 15வது கொண்டை ஊசி வளைவில் லாரி திரும்பும்போது எதிர்பாராத வகையில் லாரி பழுது ஏற்பட்டு நகர முடியாமல் நின்றது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
திம்பம் மலைப்பாதையில் இரவு 9 மணி வரை காலை 6 மணி வரை இரவு நேர வாகன போக்குவரத்து தடை விதிக்கப்பட்டதால் இரவில் பெரும்பாலும் வாகன போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று காலை 6 மணி முதல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பழுதடைந்த லாரி நேற்று காலை 11 மணியளவில் பழுது நீக்கம் செய்து நகர்த்தி நிறுத்தப்பட்டது. இதைதொடர்ந்து போக்குவரத்து சீரானது. இதனால், தமிழக-கர்நாடக மாநிலங்களுக்கு இடையே 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.