சாலைகளில் உலா வரும் குதிரைகளால் வாகன ஓட்டுனர்கள் அவதி: அதிகாரிகள் கவனிப்பார்களா?

பழநி: பழநி சாலைகளில் உலா வரும் குதிரைகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கோயில் நகரான பழநிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பஸ் நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் இறங்கி, பழநி கோயிலுக்கு செல்ல பயன்படுத்தக் கூடிய முக்கிய வாகனமாக குதிரைவண்டி உள்ளது. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்திழுக்கும் குதிரைவண்டி பயணம் பழநியில் பெரிதும் பிரசித்தி பெற்றவை.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அழிந்துபோன இந்த குதிரை வண்டித் தொழில் பக்தர்களின் ஆதரவால் பழநி நகரில் மட்டும் உயிர்போடு இருந்து வருகிறது. கொரோனா பரவல் காரணமாக பழநி கோயிலில் பக்தர்கள் தரிசனம் சில மாதங்களுக்கு நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் கோயில் நகரான பழநி பக்தர்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்டது. அந்த நேரத்தில் பல குதிரை வண்டிக்காரர்கள் தங்களது குதிரைகளை பராமரிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.

குதிரைவண்டி உரிமையாளர்களே வாழ்வாதாரமின்றி தவித்து வரும் நிலையில் குதிரைகளை பராமரிப்பது பெரும் கேள்விக்குறியான விஷயமாக மாறியது. இதனால் வயதான குதிரைகள் பல சாலைகளில் அவிழத்து விடப்பட்டன. இதனால் பழநி நகர சாலைகளில் தற்போது ஆங்காங்கே குதிரைகள் கூட்டமாக சுற்றித்திரிந்து வருகின்றன. சாலையின் குறுக்கே ஓடுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிகுள்ளாகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து சாலைகளில் உணவின்றி சுற்றித்திரியும் குதிரைகளை பாதுகாக்க முன்வர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: