சிறுத்தை தாக்கியதில் வனப்பாதுகாவலர் காயம்

தேனி: தேனி வனச்சரகத்தில் சோலார் மின்வேலியில் சிக்கியிருந்த சிறுத்தையை மீட்கச் சென்ற உதவி வனப்பாதுகாவலர், சிறுத்தை தாக்கியதில் காயமடைந்தார். தேனி வனச்சரகம், வரட்டாறு பீட்டில் கைலாசநாதர் கோயில் மலைக்கு பின்புறம் மலைக்காப்பு காடு உள்ளது. இங்குள்ள தென்னந்தோப்பு பகுதியில் அடிக்கடி சிறுத்தை நடமாடுவதால் வனப்பாதுகாவலர்கள் அதனை பிடித்து காட்டுப்பகுதிக்குள் விடுவது வழக்கம். இப்பகுதியில் வனவிலங்குகள் விவசாய தோட்டப்பகுதிக்குள் வராமல் தடுக்க வனத்துறை மூலமாக சோலார் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. நேற்று இந்த மின்வேலியில் சிறுத்தை ஒன்று அகப்பட்டிருப்பதாக வனத்துறைக்கு தெரியவந்தது.

இதனையடுத்து தேனி உதவி வனப்பாதுகாவலர் மகேந்திரன், தேனி வனச்சரகர் செந்தில்குமார் தலைமையில் வனத்துறையினர் சிறுத்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது மின்வேலியில் இருந்து மீண்ட சிறுத்தை அச்சத்தில் அப்பகுதியில் இருந்த உதவி வனப்பாதுகாப்பு அலுவலர் மகேந்திரன் மீது பாய்ந்து தாக்கி விட்டு, வனப்பகுதிக்குள் தப்பிச் சென்று விட்டது. சிறுத்தை கடித்ததில் உதவி வனப்பாதுகாவலர் மகேந்திரனுக்கு இடது கையில் காயம் ஏற்பட்டது. மேலும் சிறுத்தையின் நகங்கள் கீறியதில் கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து வனப்பாதுகாவலர் தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிசிச்சை பெற்று வருகிறார்.

Related Stories: