×

காஞ்சிபுரம் அருகே உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றபோது டாரஸ் லாரி மோதி மனைவி, மகள் பலி: கணவர் கண்முன் பரிதாபம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றபோது பைக் மீது டாரஸ் லாரி மோதியதில் தலைதுண்டித்து மனைவியும், மகளும் பலியானார்கள். கணவர், மற்றொரு மகள் படுகாயத்துடன் உயிர் தப்பினர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. காஞ்சிபுரம்  அடுத்த ஓரிக்கை பேராசிரியர் நகரை சேர்ந்தவர் பழனி. சென்னை தலைமை செயலகத்தில் நிதித்துறையில் அலுவலராக வேலைசெய்து வருகிறார். இவரது மனைவி வித்யா (40). இவர்களுக்கு இரட்டையர்களான பூர்ணிமா, பூர்வீகா (4) என்ற குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இன்று ஓரிக்கை மணிமண்டபம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டின் மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்துகொள்ள பைக்கில் மனைவி, குழந்தைகளை பழனி அழைத்து சென்றுள்ளார்.

ஓரிக்கை காந்திநகர் அருகே வந்தபோது, எதிரே அதிவேகமாக வந்த டாரஸ் லாரி பைக் மீது மோதியது. 4 பேரும் பைக்குடன் தூக்கிவீசப்பட்டனர். இதில், தலை துண்டித்து வித்யாவும், பூர்ணிமாவும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வந்து, படுகாயத்துடன் இருந்த  பழனி, பூர்வீகா ஆகியோரை  காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர், வித்யா, பூர்ணிமா ஆகியோரின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிய  டாரஸ் லாரி டிரைவரை தேடி வருகின்றனர். இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தையும், மனைவி தலைதுண்டித்தும் இறந்த சம்பவம்  காஞ்சிபுரம் அருகே சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags : Kancheepuram , Taurus lorry hits wife, daughter while visiting relatives near Kanchipuram
× RELATED செங்கல்பட்டு, காஞ்சிபுரம்...