திருச்சி : திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் தயாரான ஊட்டி மலை அதிவேக டீசல் என்ஜினை தெற்கு ரயில்வே பொதுமேலாளர் மல்லையா நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் புதிதாக தயாரிக்கப்பட்ட 66வது டீசல் (லோகோ) என்ஜின் மற்றும் நீலகிரி ஊட்டிமலை ரயில் இன்ஜின்களை தெற்கு ரயில்வே பொதுமேலாளர் மல்லையா நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து தெற்கு ரயில்வே பொது மேலாளர் மல்லையா செய்தியாளர்களிடம் கூறுகையில், இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு. பொன்மலை பணிமனை 100 வருட வரலாற்று சிறப்பு பெற்றுள்ள நிலையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.
அந்த வகையில் அதிவேக டீசலால் இயக்கப்படும் ஊட்டி மலை ரயில் என்ஜின் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த இன்ஜினை, உருவாக்க பாடுபட்ட தொழிலாளர்களுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். வந்தே பாரத் திட்டம் தமிழகத்திற்கு வர கொஞ்சம் காலம் ஆகும். அவற்றுக்கு பயன்படும் சில ரயில் பெட்டிகள் தொகுப்பு (ரேக்ஸ்கள்) நடப்பு நிதியாண்டில் வந்து சேரும் என எதிர் பார்க்கப்படுகிறது.
மேலும் தமிழகத்தில் பாரத் கவுரவ் திட்டத்தில் ஏற்கனவே 5 ரயில்கள் இயங்குகின்றன.மேலும் கூடுதலாக ஒரு ரயில் இந்த மாதத்திலும், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில்,3 ரயில்களும் இயக்கப்படும். இத்திட்டம் தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், பல்வேறு இடங்கள் தேர்வு செய்ப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.அப்போது, பணிமனை முதன்மை பொதுமேலாளர் ஷியாம்தார் ராம், துணைப் பொதுமேலாளர் கணேஷ் மற்றும் ரயில்வே பணிமனை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.