பேராவூரணியில் பிடிபட்ட 2,5 அடி நீளம், 2 கிலோ எடை மண்ணுளி பாம்பு சிக்கியது-வனப்பகுதியில் விடப்பட்டது

பேராவூரணி : பேராவூரணியில் பிடிபட்ட சுமார் இரண்டரையடி நீளமும், இரண்டு கிலோ எடையும் உடைய மண்ணுளிப்பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது.பேராவூரணி அருகே பழைய பேராவூரணியில் அக்ரி நடராஜன் என்பவர் நர்சரிப் பண்ணை நடத்தி வருகிறார். இவரது பண்ணையில் மண்ணுளிப்பாம்பு நடமாட்டம் இருப்பதை பார்த்த அக்ரி நடராஜன் மண்ணுளிப்பாம்பை பிடித்து மண் பானையில் மண்ணைக் கொட்டி பத்திரப்படுத்தி வைத்து , இது குறித்து பேராவூரணி தாசில்தார் சுகுமாருக்கு தகவல் தெரிவித்தார்.

தாசில்தார் அறிவுறுத்தலின் பேரில், மாவட்ட வன அலுவலர் அகில் தம்பிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் குமார் மற்றும் வனத்துறை அலுவலர்கள் பேராவூரணி வந்து தாசில்தார் சுகுமார் முன்னிலையில் பிடித்து வைத்திருந்த மண்ணுளிப் பாம்பை அக்ரி நடராஜன் வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். பாம்பை பெற்றுச் சென்ற வனத்துறையினர், அதனை பாதுகாப்பாக, காப்புக்காடு பகுதியில் விட்டனர்.

மண்ணுளிப்பாம்புகள் விஷமற்ற தன்மை உடையது, ஆட்களை கண்டால், உடலை சுருட்டி படுத்துக் கொள்ளும் மண்புழு குடும்ப வகையை சேர்ந்த ஒரு பெரிய புழு மட்டுமே இது. மண்ணுளிப்பாம்பு மண்ணை உண்டு மண்ணிலேயே கழிவு செய்யும். இதன் எச்சம் வீர்யமான இயற்கை உரம். ஒரு இடத்தில் ஒரு மண்ணுளிப்பாம்பு இருந்தால் அந்த பகுதிக்கே தேவையான இயற்கை உரம் கிடைக்கிறது. மண்வளத்தை பெருக்கும் மண்ணுளிப்பாம்புகளை சமூக விரோதிகள் பிடித்து எய்ட்ஸ் நோய்க்கு மருந்து உள்ளது என்று கூறி சட்டவிரோதமாக விற்பனை செய்து வருகின்றனர். இது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972 கீழ் சட்ட விரோத வர்த்தகம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories: