சென்னையில் குடிசைகள் இல்லாத நிலையை உருவாக்கியது திமுக ஆட்சி: திருச்சி சிவா பேச்சு

பெரம்பூர்,: குடிசைகள் இல்லா சென்னையை உருவாக்கிய பெருமை திமுகவையே சாரும் என சூளையில் நடந்த திமுக முப்பெரும் விழா நிகழ்ச்சியில் திருச்சி சிவா பேசினார். சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், திமுக முப்பெரும் விழாவை முன்னிட்டு எழும்பூர் வடக்கு பகுதி தி.மு.க சார்பில் \\”சமத்துவ திருவிழா; எளியோர்கள் முன்னேற உழைப்போம், எல்லோரையும் சமமாக அணைப்போம்\\” என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் சென்னை சூளை பகுதியில் உள்ள அங்காளம்மன் கோயில் தெருவில் நேற்று முன்தினம் நடந்தது. பகுதிச் செயலாளர் சொ.வேலு தலைமை வகித்தார்.

கூட்டத்தில் திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் திருச்சி என்.சிவா, சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான சேகர்பாபு, திமுக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி ஆகியோர் உரையாற்றினார். எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், திரு.வி.க நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன், மாவட்ட, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் திருச்சி சிவா பேசியதாவது: சமூக நீதிக்காக போராடிய தலைவர்களின் முதன்மைத் தகுதி தந்தை பெரியாருக்கு மட்டும்தான் உண்டு. நமக்கு இன்று கல்வி கிடைக்க காரணம் பெரியார் மட்டும் தான்.

பக்கத்தில் இருப்பவர் என்ன சாதி என்று தெரியாமல் உட்கார்ந்து இருக்கிறோம் என்றால், அதற்கு காரணம் பெரியார். மக்கள் ஏற்றுக் கொண்ட சுயமரியாதை திருமணத்தை, சட்டமும் ஏற்கும் வகையில் மாற்றியவர் தி.மு.கவை தொடங்கி ஆட்சிக் கட்டிலில் உட்கார வைத்த அண்ணாதான். அண்ணா வந்த பின்னர்தான் இழந்திருந்த உரிமைகளை தமிழகம் பெற்றது.

சென்னையில் குடிசைகள் இல்லாத நிலையை உருவாக்கியது தி.மு.க ஆட்சிதான். ஆனால் இந்தியாவின் தொழில் நகரமான மும்பையில் இன்றும் குடிசைகள் இருக்கிறது. சென்னையில் அந்த நிலையை பல ஆண்டுகளுக்கு முன்பே மாற்றியவர் கலைஞர்.

ஏழையும் மாடி வீட்டில் குடியேறலாம் என்று மாற்றிக் காட்டிய இயக்கம் தி.மு.க. இப்படி தி.மு.க செய்த சாதனைகளை சொல்லியாக வேண்டும் என்று சொன்னால் ஒருநாள் இரவு முழுவதும் கருத்தரங்கம் நடத்தியாக வேண்டும். அண்ணா, கலைஞர், தளபதியார் என இந்த இயக்கம் எந்த மக்களுக்காக உழைக்கிறது என்பதை அனைவரும் யோசித்துப் பாருங்கள். இந்த அளவுக்கு எளிமையான தலைவர்களை எங்குமே பார்க்க முடியாது என்பதே உண்மை. இவ்வாறு திருச்சி சிவா பேசினார்.

Related Stories: