கொடுங்கையூரில் தொழில் போட்டியில் பயங்கரம் கழுத்தை இறுக்கி மேஸ்திரி கொலை: தூக்கில் தொங்கவிட்டு நாடகமாடிய பக்கத்து வீட்டுக்காரர் கைது

பெரம்பூர்: சென்னை கொடுங்கையூர் தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை ஆதிவாசி காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபால் (47), இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி பெரியநாயகி (38) என்ற மனைவியும், இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். நேற்று முன்தினம் காலை 8 மணி அளவில் ஜெயபால் குடும்பத்தினர் அனைவரும் வெளியே சென்று விட்டனர். இந்நிலையில், ஜெயபால் மட்டும் வீட்டில் மது அருந்திவிட்டு தனியாக இருந்து உள்ளார். அப்போது, பக்கத்து வீட்டில் வசிக்கும் ஆறுமுகம் மற்றும் ரமேஷ் ஆகியோர் வெகு நேரமாக கூப்பிட்டும் ஜெயபால் வெளியே வரவில்லை. எனவே, சந்தேகம் அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது ஜெயபால் ஹாலில் புடவையால் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பிறகு அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கீழே இறக்கி கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற கொடுங்கையூர் போலீசார் ஜெயபாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, இறந்த நபருக்கு இடது கண் மற்றும் தொடை பகுதியில் லேசான காயம் இருந்துள்ளது. ஸ்டான்லி மருத்துவமனையில் நேற்று காலை ஜெயபால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, அவரது கழுத்தின் அருகே காயம் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என மருத்துவர்கள் கொடுங்கையூர் போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து, எம்கேபி நகர் உதவி கமிஷனர் தமிழ்வாணன் மற்றும் கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் தற்கொலை வழக்கை தீவிரமாக விசாரித்தனர்.

அவர், தூக்கில் தொங்கியபோது முதலில் பார்த்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஆறுமுகம் (40), கொடுங்கையூர் சேலைவாயில் பகுதியை சேர்ந்த ரமேஷ் (43) ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை செய்தனர். அப்போது, இருவரும் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை செய்தபோது, ஜெயபால் வீட்டின் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஆறுமுகம் என்பவரும், ஜெயபாலும் கட்டிட மேஸ்திரி வேலை செய்து வந்துள்ளனர். இருவரும் தங்களது ஆட்களை அழைத்துக் கொண்டு குறிப்பிட்ட இடத்திற்கு சென்று வேலைக்காக காத்திருக்கும்போது ஆறுமுகத்தை விட ஜெயபால் கூலி குறைவாக வாங்கி வந்துள்ளார். இதனால் பெரும்பாலான வேலைகள் ஜெயபாலுக்கு கிடைத்துள்ளது. எனவே, ஆத்திரமடைந்த ஆறுமுகம் சம்பவத்தன்று காலை ஜெயபால் வீட்டிற்கு வந்து அவர் போதையில் இருந்தபோது தனது கையால் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு, எதுவும் தெரியாதது போல வீட்டில் இருந்த புடவையால் மின்விசிறி கொக்கியில் தூக்குப்போட்டது போன்று செட்அப் செய்து விட்டு சென்று விட்டதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கொலைக்கு ரமேஷ் ஆறுமுகத்திற்கு உறுதுணையாக இருந்தாரா இல்லையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆறுமுகம் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரிடமும் கொடுங்கையூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலை என முதலில் அனைவரையும் நம்ப வைத்து விட்டு பிரேத பரிசோதனை அறிக்கையில் கொலை என நிரூபணம் ஆகி நண்பர்களிடம் விசாரிக்கும் போது கழுத்தை இறுக்கி கொடூரமாக கொலை செய்ததை பக்கத்து வீட்டுக்காரர் ஒப்புக்கொண்ட சம்பவம் கொடுங்கையூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: