உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தமிழகத்தை கண்டு மகிழ்வோம் நிகழ்ச்சி: அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்

சென்னை: உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, ‘தமிழகத்தை கண்டு மகிழ்வோம்-2022’ என்ற நிகழ்ச்சியை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார். உலக சுற்றுலா தினத்தை(27ம் தேதி) முன்னிட்டு சென்னை கலைவாணர் அரங்கத்தில் ‘தமிழகத்தை கண்டு மகிழ்வோம்-2022’ என்ற நிகழ்ச்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேற்று தொடங்கி வைத்து பேசியதாவது: தமிழகத்தில் சாகச சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா, உணவுடன் கூடிய உறைவிடம் மற்றும் கேரவன் சுற்றுலா போன்ற திட்டங்களின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பacட உள்ளன. தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலா தலங்கள் மற்றும் அதிகம் பிரபலமடையாத சுற்றுலா தலங்களுக்கு சமூக ஊடக வியலாளர்களை அழைத்துச் சென்று, அதன் சிறப்புகள் குறித்து அவர்கள் அறிந்து கொள்வதன் மூலம் பார்வையிட்ட இடங்களின் விவரங்களை தங்களது சமூக வலைதளங்கள் வாயிலாக பிரபலப்படுத்துகின்றனர்.  

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 10 வலைதள பிரபலங்கள் ஒவ்வொருவரும் சுமார் ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர் பின்தொடர்பவர்களாக உள்ளனர். இந்த 10 சமூக ஊடகவியலாளர்கள் ஜவ்வாது மலை, ஒகேனக்கல், கொல்லிமலை, பூச்சமருதூர் (கோவை), சேத்துமடை, வால்பாறை, கோயமுத்தூர் ஆகிய பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.  இதன்மூலம் இச்சுற்றுலாத்தலங்கள் பிரபலமடைந்து அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருகைதர வழிவகுக்கும். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் சந்தரமோகன், சுற்றுலா இயக்குநர் சந்தீப் நந்தூரி, சுற்றுலாத்துறை இணை இயக்குநர் புஷ்பராஜ், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக பொது மேலாளர் பாரதி தேவி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

* 52 பேருக்கு சுற்றுலா விருது

சுற்றுலாவின் வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிக்கும் சுற்றுலா தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் 52 பேருக்கு தமிழ்நாடு சுற்றுலா விருதுகளை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார். இதற்கான விண்ணப் பங்கள் www.tntourismawards.com இணையதளத்தில் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் மூலம் பெறப்பட்டன. மொத்தம் பெறப்பட்ட 438 விண்ணப்பங்களில், 17 பிரிவுகளின் கீழ் 52 விருதுகள் வழங்கப்பட்டது.

Related Stories: