விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 6 வயது சிறுமி, கடந்த 26.12.2018ல், அருகில் உள்ள பெட்டிக்கடைக்கு சாக்லெட் வாங்க சென்றுள்ளார். பெட்டிக்கடையின் உரிமையாளரான நடராஜன் (73), சிறுமிக்கு சாக்லெட்டுகளை தருகிறேன் என்று கூறி கடையின் பின்புறமுள்ள ஒரு அறைக்கு அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அச்சிறுமி, வீட்டிற்கு சென்று நடந்த சம்பவம் பற்றி பெற்றோரிடம் கூறியுள்ளார். புகாரின்படி உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் நடராஜனை கைது செய்தனர். இந்த வழக்கை விழுப்புரம் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சாந்தி விசாரித்து, நடராஜனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதமும்,பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடும் வழங்க நேற்று உத்தரவிட்டார்.