திருச்சி: திமுக முதன்மை செயலாளரும், நகர்ப்புற நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம், கடந்த 2012 மார்ச் 29ம்தேதி நடைப்பயிற்சி சென்றபோது மர்ம நபர்களால் கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். தற்போது இந்த கொலை வழக்கை சிறப்பு புலனாய்வு தனிப்படை எஸ்பி ஜெயக்குமார், டிஎஸ்பி மதன், இன்ஸ்பெக்டர் ஞானவேல் ஆகியோர் அடங்கிய சிறப்பு குழு விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், இவ்வழக்கில் திடீர் திருப்பமாக சென்னையை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ எம்.கே.பாலன் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடிகள் திண்டுக்கல் கணேசன், புதுக்கோட்டையை சேர்ந்த செந்தில்குமார் உள்பட 4 பேரை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிடித்து விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பழைய காவல் நிலையத்தில் வைத்து டிஎஸ்பி மதன், இன்ஸ்பெக்டர் ஞானவேல் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய விசாரணை நடத்தினர். தொடர்ந்து, நேற்றும் அவர்களிடம் விசாரணை நடந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.