கோபி அருகே அதிகாலையில் சென்னை டாக்டரின் தாய் சரமாரி வெட்டிக்கொலை: செய்வினை வைத்ததால் கொன்றதாக போலீசில் சரணடைந்தவர் வாக்குமூலம்

கோபி: கோபி அருகே டாக்டரின் தாயை வெட்டிக்கொலை செய்தவர் போலீசில் சரணடைந்தார். ஈரோடு மாவட்டம் கோபி அருகே ஒத்தக்குதிரை, கே.மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சரஸ்வதி (88). இவரது மகன் சுகுமார் (70), மகள் ராதா (68). சுகுமார்  கோபி அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னர் சென்னையில் வசித்து வருகிறார். ராதா கோபியில் வசித்து வருகிறார். கணவர் இறந்ததால் சரஸ்வதி தனியாக வசித்து வந்தார். அவர் நேற்று அதிகாலை வழக்கம்போல் எழுந்து கோலமிட வாசலுக்கு வந்தார்.

அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர் சரஸ்வதியை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் மர்மநபர் தப்பிவிட்டார். இதனையடுத்து சரஸ்வதியை மீட்டு கோபியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடலை வீட்டிற்கு கொண்டு வந்து இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளை  தொடங்கினர். தகவலறிந்து கோபி போலீசார் சரஸ்வதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். அவரை கொலை செய்தது அதே பகுதியை சேர்ந்த பாலுசாமி (45) என்பது தெரியவந்தது. இந்த நிலையில் அவர் கோபி போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். சரஸ்வதி அதே பகுதியில் கோயில் கட்டி பஜனை மற்றும் வழிபாடு நடத்தி வந்துள்ளார். சரஸ்வதி செய்வினை வைத்ததால்தான் தனக்கு 45 வயதாகியும் திருமணம் நடக்கவில்லை என்று பாலுசாமி நினைத்துள்ளார். அந்த ஆத்திரத்தில் இருந்த அவர் நேற்று காலை சரஸ்வதியை வெட்டிக்கொன்றது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் பாலுசாமியை கைது செய்தனர்.

Related Stories: