வேதாரண்யம்: வேதாரண்யம் அரசு பள்ளியில் 12 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி ஆசிரியர், போக்சோ சட்டத்தில் நேற்று கைது செய்யப்பட்டார். நாகை மாவட்டம் வேதாரண்யம் ஒன்றியம் கத்தரிப்புலம் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றுபவர் அசோகன்(38). இவர், அப்பள்ளியில் படிக்கும் 11, 12ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அப்பள்ளியை சேர்ந்த 12 மாணவிகள், கடந்த 21ம் தேதி பள்ளி தலைமை ஆசிரியர் குமாரிடம் புகார் செய்தனர்.
இந்த புகாரை கலெக்டர், எஸ்பி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோருக்கு தலைமை ஆசிரியர் அனுப்பி வைத்தார். இதுதொடர்பாக கரியாப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர்கொடி, விஏஓ ரவிக்குமார் ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர். மேலும் பாதிக்கப்பட்ட 12 மாணவிகளிடமும் தனித்தனியாக நடத்தப்பட்ட விசாரணையில், உடற்கல்வி ஆசிரியர் அசோகன், பள்ளியின் அருகில் டியூசன் சென்டர் நடத்துவதும், அங்கு செல்லும் மாணவிகளுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி, மாணவிகளிடம் ஆத்துமீறிய செயல்களில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அசோகனை நேற்று கைது செய்தனர்.