புதுச்சேரி: புதுச்சேரியில் இந்து முன்னணி அமைப்புகள் சார்பில், நேற்று பந்த் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக புதுச்சேரியில் தனியார் பஸ்கள் முற்றிலும் ஓடவில்லை. மேலும் அரசு பஸ்களும் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டன. சென்னை மற்றும் வெளியூர் செல்லும் பயணிகளுக்காக, புதுவை பஸ் நிலையத்தில் துப்பாக்கி ஏந்தி போலீசார் பாதுகாப்புடன் குறைந்த அளவில் பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் பாஜ தொழிற்சங்கம் ஆதரவு காரணமாக டெம்போ, ஆட்டோக்கள் ஓடவில்லை. அரசு அலுவலகங்கள், வங்கிகள், பெட்ரோல் பங்குகள், அரசு மற்றும் நிதியுதவி பள்ளிகள் வழக்கம்போல் இயங்கின. ஆனால் பஸ்கள் ஓடாததால் மாணவர்கள் பள்ளி செல்வதில் பாதிப்பு ஏற்பட்டது. பஸ்களை இயக்கும் தனியார் பள்ளிகள் மட்டும் மூடப்பட்டன.