சென்னை: தேனாம்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் சிலையை உடைத்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிமுகவினர் திடீர் போராட்டம் நடத்தினர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை தேனாம்பேட்டை ஜி.என்.செட்டி சாலையில், கடந்த 2006ம் ஆண்டு அதிமுக சார்பில் மார்பளவு எம்ஜிஆர் சிலை ஒன்று திறக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் சிலர் எம்ஜிஆர் சிலையின் மூக்கை உடைத்து சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளனர். வழக்கம்போல் நேற்று அதிகாலை அப்பகுதி மக்கள் எம்ஜிஆர் சிலையை பார்த்தபோது, சிலையின் மூக்கு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த தகவல் அப்பகுதியில் பரவியதை தொடர்ந்து, நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் ஜிஎன் செட்டி சாலையில் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.